புதுடெல்லி: இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படைக்கு ரிமோட் கன்ட்ரோல் துப்பாக்கிகள் தயாரித்து வழங்க ரூ.1,752 கோடியில் கான்பூர் நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதுதொடர்பாக பாதகாப்பு அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படைக்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 12.7 மிமீ ரிமோட் கன்ட்ரோல் துப்பாக்கிகள் தயாரித்து வழங்க கான்பூரைச் சேர்ந்த அட்வான்ஸ்டு வெபன் எக்யூப்மென்ட் நிறுவனத்துடன் ரூ.1,752.13 கோடியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதில் 85 சதவீத உதிரி பாகங்கள் உள்நாட்டைச் சேர்ந்தவையாக இருக்கும். இந்த துப்பாக்கிகள், கப்பலில் இருந்து சிறிய இலக்குகளை இரவிலும், பகலிலும் துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்டவை’ என கூறப்பட்டுள்ளது.