சென்னை: ராகுல் காந்தி வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். காங்கிரஸின் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்திவைத்தது. ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீடு வழக்கை விசாரித்த பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்தது. தனக்கு விதித்த இரண்டு ஆண்டு சிறை தண்டனையை நிறுத்திவைக்கக் கோரி ராகுல் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு முத்தரசன், கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ராகுல் காந்தி வழக்கில் நீதி வென்றது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு தண்டனையை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம். நீதித்துறையின் வலிமை மற்றும் ஜனநாயக விழுமியங்கள் மீதான நம்பிக்கையை மீண்டும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு உறுதிப்படுத்தி உள்ளது. ராகுல்காந்தி வழக்கில் நீதி வென்றுள்ளது; சகோதரர் ராகுல் காந்தியை வயநாடு தொகுதி மீண்டும் தக்க வைத்துக் கொண்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.