புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி புதிய பாஸ்போர்ட் வாங்க தடையில்லா சான்று கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். பிரதமர் மோடி குறித்த அவதூறு பேச்சுக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை பெற்ற ராகுல் காந்தி மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து அவர் வௌிநாடுகளுக்கு செல்வதற்கான அரசாங்க பாஸ்போர்ட்டை திருப்பி அளித்தார். இந்நிலையில் அமெரிக்காவுக்கு செல்ல ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளார். இதற்காக சாதாரண பாஸ்போர்ட் வாங்க ராகுல் முடிவு செய்துள்ளார்.
அவர் பாஜ மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி தொடர்ந்த நேஷனல் ஹெரால்டு வழக்கு டெல்லி ரோஸ்அவென்யூ வளாகத்தில் உள்ள கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனால், பாஸ்போர்ட் வழங்க தடையில்லா சான்றிதழ் வழங்கக் கோரி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ராகுல் மனு செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் இது தொடர்பாக சுப்ரமணியன் சுவாமி பதில் தருமாறு உத்தரவிட்டார். இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற உள்ளது.