புதுடெல்லி: சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி முன்னாள் துணைமுதல்வர் மணிஷ் சிசோடியாவை காவல்துறையினர் கழுத்தை பிடித்து இழுத்துச் சென்றனர். டெல்லி புதிய மதுபான கொள்கையை அமல்படுத்தியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக மணிஷ் சிசோடியா எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, அவர் டெல்லி துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிசோடியாவை போலீசார் நேற்று டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு திருப்பி அழைத்து வந்தனர். அப்போது அவர் செய்தியாளர்களிடம், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் அவசர சட்டம் இயற்றிய ஒன்றிய அரசை விமர்சித்ததாக கூறப்படுகிறது.
அப்போது பாதுகாப்புக்கு வந்த போலீசார் ஒருவர் சிசோடியை கழுத்தை பிடித்து இழுத்து செல்லும் விடியோ வௌியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விடியேவை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஆம் ஆத்மி தலைவர் அடிசி, “சிசோடியாவை போலீசார் நடத்திய விதம் அதிர்ச்சி அளிக்கிறது. மணிஷ் சிசோடியாவிடம் தவறாக நடந்து கொண்ட அதிகாரியை பணி நீக்கம் செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். இந்த சம்பவம் குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ள டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், “சிசோடியாவிடம் இப்படி நடந்து கொள்ள காவல்துறைக்கு என்ன உரிமை இருக்கிறது” என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஆம் ஆத்மியின் குற்றச்சாட்டுக்கு டெல்லி காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. “காவலில் உள்ளவர்கள் ஊடகங்களுக்கு பேட்டி தருவது சட்டத்துக்கு எதிரானது. பாதுகாப்பு காரணங்களுக்காகவே அவ்வாறு போலீசார் நடந்து கொண்டனர்” என்று கூறியுள்ளது.