Friday, May 10, 2024
Home » புனே மருத்துவமனையில் இருந்து தப்பிய பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னன் லலித் பாட்டீல் சென்னையில் பிடிபட்டான்: துப்பாக்கி முனையில் பிடித்தனர் மும்பை தனிப்படையினர்; போதை பொருளை தயாரிக்க தொழிற்சாலை நடத்தியவர்

புனே மருத்துவமனையில் இருந்து தப்பிய பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னன் லலித் பாட்டீல் சென்னையில் பிடிபட்டான்: துப்பாக்கி முனையில் பிடித்தனர் மும்பை தனிப்படையினர்; போதை பொருளை தயாரிக்க தொழிற்சாலை நடத்தியவர்

by Karthik Yash

சென்னை: புனே அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய பிரபல போதை பொருள் கடத்தல் மன்னன் லலித் பாட்டீல் சென்னையில் பதுங்கி இருந்தபோது, தனிப்படை போலீசாரால் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டான்.
சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடையவர் மும்பை போதை பொருள் கடத்தல் மன்னன் லலித் பாட்டீல். கடந்த 2020ம் ஆண்டு ரூ.20 கோடி மதிப்புள்ள 20 கிலோ போதை பொருள் கடத்தல் வழக்கில் மும்பை போலீசார் லலித் பாட்டீல் மற்றும் அவரது கூட்டாளியை கைது செய்தனர்.

இந்நிலையில், சிறையில் இருக்கும்போது லலித் பாட்டீலுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, சிறைத்துறை அதிகாரிகள் புனேயில் உள்ள சசூன் அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது மருத்துவமனையில் இருந்து கடந்த 2ம் தேதி லலித் பாட்டீல் கழிவறைக்கு செல்வதாக கூறி போலீசாரை ஏமாற்றிவிட்டு தப்பினார்.இதையடுத்து அவரை பிடிக்க மும்பை போலீசார் தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.
பின்னர், தனிப்படை போலீசார் லலித் பாட்டீல் பயன்படுத்தும் செல்போன் சிக்னலை கண்காணித்து வந்தனர்.

அப்போது, அவர், சென்னையில் பதுங்கி இருப்பது உறுதியானது. அதைதொடர்ந்து மும்பையில் இருந்து வந்த தனிப்படை போலீசார் கடந்த 2 நாட்களாக நோட்டமிட்டு, சென்னை போலீசார் உதவியுடன் துப்பாக்கி முனையில் நேற்று முன்தினம் கைது செய்தனர். புனே மருத்துவமனையில் இருந்து தப்பிய லலித் பாட்டீல், நேராக குஜராத் மாநிலத்துக்கு சென்றுள்ளார். மேலும், கர்நாடகாவில் தலைமறைவாக இருந்துள்ளார். அவர், போலீசாரிடம் சிக்காமல் இருக்க அடிக்கடி தனது செல்போன் மற்றும் சிம் கார்டுகளை மாற்றி வந்துள்ளார். இதனால், மும்பை தனிப்படை போலீசாரால் அவரை பிடிக்க முடியாமல் திணறினர். அதேநேரம், சைபர் க்ரைம் போலீசார் லலித் பாட்டீல் கூட்டாளிகளின் செல்போன் எண்களை கண்காணித்தனர்.

அப்போது அடிக்கடி ஒரு நம்பரில் இருந்து அவரது கூட்டாளிகளுக்கு அழைப்பு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே, அந்த செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தியபோது, அது போதை பொருள் கடத்தல் மன்னன் லலித் பாட்டீல் பயன்படுத்தும் செல்போன் என்பது தெரியவந்தது. உடனே லலித் பாட்டீல் செல்போன் எண்ணை கண்காணித்து சென்னையில் இருப்பதை உறுதி செய்தோம். அதன் பின்னர் அவரை கைது செய்ததாக மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள லலித் பாட்டீல் மீது, ரூ.130 கோடி மதிப்புள்ள மெபெட்ரோன் என்ற போதை பொருளை தனியாக பயோடேக் தொழிற்சாலையில் தயாரித்து சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலுக்கு அனுப்பிய வழக்கும் அவர் மீது நிலுவையில் உள்ளது.

அதேபோல், கடந்த 2020ம் ஆண்டு லலித் பாட்டீ கைது செய்யப்பட்டாலும், அவர் சிறையில் இருந்து தனது ஐ-போன் மூலம் போதை பொருட்களை தடையின்றி தனது அடியாட்களை வைத்து நடத்தி வந்துள்ளார். இதனால் சென்னையில் லலித் பாட்டீல் தங்குவதற்காக போதை பொருள் கடத்தல் கும்பலை சார்ந்த யாரேனும் உதவி செய்து இருப்பார்கள் என்று மும்பை போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். எனவே அவர்களை பிடிக்க மும்பை போலீசார் சென்னை மாநகர காவல்துறை உதவியை கோரியுள்ளதாக உயர் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரபல மும்பை போதை பொருள் கடத்தல் மன்னன் சென்னையில் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You may also like

Leave a Comment

nine − eight =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi