ஐதராபாத்: ‘கடந்த 10 ஆண்டுகளில் துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் என பல்வேறு உள்கட்டமைப்பு திட்டப்பணிகளை அதானிக்கு மோடி கொடுத்துள்ளார்’ என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார். தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு அம்பானி, அதானி குறித்து ராகுல் ஏன் பேசுவதில்லை என நேற்று முன்தினம் பிரதமர் மோடி கேள்வி கேட்டதும், அதற்கு ராகுல் அளித்த பதிலும் பிரசார களத்தை பரபரப்பாக்கி உள்ளது. இந்நிலையில், தெலங்கானாவின் துதராபாத்தில் நேற்று நடந்த பிரசாரத்தில் ராகுல் பேசியதாவது: கடந்த 10 ஆண்டுகளாக நாடு முழுவதும் 20 முதல் 22 பேருக்காக மட்டுமே பிரதமர் மோடி பாடுபட்டு அவர்களை கோடீஸ்வரர்கள் ஆக்கி உள்ளார். இதற்காகத்தான், கடந்த 10 ஆண்டு ஆட்சியில் துறைமுகங்கள், விமான நிலையங்களை அதானிக்கு பிரதமர் மோடி தாரைவார்த்துள்ளார்.
இதுதவிர பாதுகாப்பு ஒப்பந்தங்கள் மற்றும் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டப்பணிகளை அதானிக்கு மோடி கொடுத்துள்ளார். இடஒதுக்கீட்டை முற்றிலும் ரத்து செய்ய பாஜ விரும்புகிறது. அதற்குதான், பல பொதுத்துறை நிறுவனங்களை பாஜ அரசு தனியார்மயமாக்கி உள்ளது. ஆனால் நாங்கள் இடஒதுக்கீடு உச்ச வரம்பை 50 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்த்த விரும்புகிறோம். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். பாஜ கட்சி அரசியல் சாசன சட்டத்தை மாற்ற விரும்புகிறது. அதை எந்த சக்தியாலும் செய்ய முடியாது. அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.இவ்வாறு ராகுல் கூறி உள்ளார்.
மோடி கையிலிருந்து தேர்தல் நழுவுகிறது
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில் நேற்று வெளியிட்ட வீடியோ செய்தியில், ‘‘மக்களவை தேர்தல் மோடியின் கையை விட்டு போகிறது. நழுவிக் கொண்டிருக்கிறது. அடுத்து அவர் பிரதமராக இருக்க மாட்டார். இதனால் அடுத்த சில நாட்களில் உங்கள் கவனத்தை திசை திருப்ப ஏதாவது நாடகம் நடத்த முடிவு செய்துள்ளார். உங்கள் கவனத்தை திசை திருப்பாதீர்கள். மோடியின் பொய் பிரசாரத்தில் ஏமாறாதீர்கள். அவர் பணமதிப்பிழப்பை அமல்படுத்தினார். தவறான ஜிஎஸ்டியை கொண்டு வந்தார். அதானி போன்றவர்களுக்காக மட்டுமே உழைத்தார். இளைஞர்களே வரும் ஜூன் 4ம் தேதி மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமையப் போகிறது. அப்போது, அடுத்த ஆகஸ்ட் 15க்குள் காலியாக உள்ள 30 லட்சம் அரசு பணியிடங்களில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தருவதற்கான பணிகளை நாங்கள் தொடங்குவோம்’’ என்றார்.