ரேபரேலி: பிரதமர் மோடி தனது பதவியின் கண்ணியத்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம், ரேபரேலி நாடாளுமன்ற தொகுதியில் உள்ள கலசஹாவில் ராகுல்காந்திக்கு ஆதரவு திரட்டும் வகையில் நியாய சங்கல் சபா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி, ‘‘பாஜ தலைவர்கள் வாய்க்கு வந்தபடி பேசுகின்றனர். அப்போது தான் உண்மையான பிரச்னைகளில் இருந்து மக்களை திசை திருப்ப முடியும்.
தேர்தல் நேரத்தில் தொலைக்காட்சியில் எப்போது விவாதம் நடந்தாலும் அவர்கள் சம்பந்தமில்லாமல் மதம் சார்ந்த பிரச்னையை எழுப்புவார்கள். சில நேரங்களில் உங்களது எருமை மாட்டை காங்கிரஸ் திருட போகிறது என்று சொல்வார். காங்கிரஸ் எக்ஸ்ரே இயந்திரத்துடன் உங்களது வீட்டிற்குள் நுழைந்து உங்களது நகைகளை எடுத்து செல்லும் என்பார்கள். நாட்டின் பிரதமர் இவ்வாறு கூறுகிறார். எவ்வளவு பெரிய பதவியை வகிக்கிறார். அந்த பதவியின் கண்ணியத்தை அவர் பார்ப்பது இல்லை”என்றார்.
பிரியங்காவின் கிளர்க்: பாஜ விமர்சனம்
ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் பாஜ வேட்பாளர் தினேஷ் பிரதாப் சிங் கூறுகையில், ‘ ரேபரேலி மக்களும் பிரதமரை நம்புகின்றனர். அமேதி தொகுதியில் உள்ளூரில் இருக்கும் தலைவரை நிறுத்தாமல் பிரியங்கா காந்தியின் கிளர்க்கை காங்கிரஸ் நிறுத்தியது ஏன்?” என்றார்.