புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாமல் இயங்கிவந்த தனியார் மனநல காப்பகத்தின் அனுமதியை ரத்து செய்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் நடவடிக்கை எடுத்துள்ளார். அன்னவாசலில் இயங்கிவந்த தனியார் தொண்டு நிறுவன மனநலக் காப்பகத்தை அமைச்சர் மா.சுப்ரமணியன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அங்குள்ள சிறிய அறைகளில் 59 பெண்கள் தங்கவைக்கப்பட்டதை கண்டறிந்தார். மேலும் சுகாதார மற்ற முறையில் காப்பகம் இயங்குவதும் தெரியவந்தது. இதனால் அதிருப்தி அடைந்த அமைச்சர் மா.சுப்ரமணியன் உடனடியாக அந்த மனநல காப்பகத்தின் உரிமத்தை ரத்து செய்ய உத்தரவிட்டார்.
அத்துடன் அந்த மனநலக் காப்பகத்தை முறையாக கண்காணிக்காத மாவட்ட சுகாதார இணை இயக்குனர் ராமுவை தற்காலிக பணியிடை நீக்கம் செய்யவும், அன்னவாசல் வட்டார மருத்துவமனை தலைமை மருத்துவர் சரவணனை பணியிடை மாற்றம் செய்யவும் மா.சுப்ரமணியன் உத்தரவிட்டுள்ளார். ஆய்வின் போது அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுத்தது பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.