காசியாபாத்: உத்தரபிரதேச தொழிலதிபர் கொலை வழக்கில் என்கவுன்டரில் குற்றவாளி சுட்டுக் கொல்லப்பட்டார். உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் அடுத்த ஷாலிமார் கார்டன் பகுதியில், டாடா ஸ்டீல் நிறுவனத் தலைவர் வினய் தியாகி கடந்த 3ம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.
அவரது உடல் வாய்க்காலில் கண்டெடுக்கப்பட்டது. கொலையாளியை போலீசார் தேடி வந்த நிலையில், நேற்றிரவு என்கவுன்டரில் டெல்லியை சேர்ந்த தக்ஷ் என்ற குற்றவாளியை போலீசார் சுட்டுக் கொன்றனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘டாடா ஸ்டீல் நிறுவனத்தின் தலைவரான வினய் தியாகியை வழிமறித்த சிலர், அவரிடம் பணத்தை பறித்துக் கொண்டு படுகொலை செய்தனர்.
இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளில் அக்கி என்ற தக்ஷ் என்பவனை தேடி வந்தோம். சாஹிபாபாத் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது, அவர்களிடம் ஒருவன் வாக்குவாதம் செய்தான். அவன் தக்ஷ் என்பது தெரியவந்தது. போலீசாரின் பிடியில் இருந்து தப்பித்த அவனை விரட்டி பிடிக்க முயன்ற போது, அவன் போலீசார் மீது தாக்குதல் நடத்தினான். அதனால் நடந்த என்கவுன்டரில் தக்ஷ் சுட்டுக் கொல்லப்பட்டான். இச்சம்பவத்தில் போலீஸ்காரர் ஒருவர் காயமடைந்தார். மற்ற குற்றவாளிகளை தேடி வருகிறோம்’ என்றனர்.