புதுடெல்லி: டெல்லி மெட்ரோ ரயிலில் பயணித்த 16 வயது சிறுவன் வெளியிட்டுள்ள பதிவில், ‘டெல்லி மெட்ரோ ரயிலில் நான் பயணித்த போது, எனது அருகில் அமர்ந்திருந்த 28 வயதுடைய இளைஞர் ஒருவர், எனது அந்தரங்க உறுப்புகளைத் தொட முயன்றார். பின்னர் நான் விலகி அமர்ந்தேன். ராஜீவ் சவுக் ரயில் நிலையம் வந்தவுடன், நான் ரயிலில் இருந்து இறங்கிச் சென்றேன். அப்போது அந்த நபர் பின்தொடர்ந்து வந்தார்.
ஒருவழியாக நான் அந்த நபரிடம் இருந்து தப்பினேன்’ என்று பதிவிட்டிருந்தார். இந்த வீடியோவை பார்த்த டெல்லி போலீசார், சிறுவனிடம் பாலியல் சேட்டை மேற்கொண்ட நபரை கைது செய்துள்ளது. இதுகுறித்து துணை போலீஸ் கமிஷனர் (மெட்ரோ) ராம்கோபால் நாயக் கூறுகையில், ‘சிறுவனின் சமூக வலைதள பதிவின்படி, மேற்கண்ட சம்பவம் ராஜீவ் சவுக் மெட்ரோ ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட ஜிதேந்தர் கவுதம் என்ற பட்டதாரியை கைது செய்துள்ளோம். அவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
ராஜீவ் சவுக் முதல் ஜஹாங்கீர் பூரி வரையிலான 15 மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பின்னரே குற்றவாளியை கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வடமேற்கு டெல்லியில் உள்ள அம்பேத்கர் காலனியில் வசித்து வருவதும், அவர் மீது வேறு ஏதும் குற்றவழக்குகள் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. அவர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கைது செய்துள்ளோம்’ என்றார்.