காரைக்கால்: தமிழ்நாட்டை பற்றி துணை நிலை ஆளுநர் தமிழிசை பேசுவதற்கு அவசியம் என்ன? என்று காரைக்கால் எம்எல்ஏ நாஜிம் கேள்வி எழுப்பியுள்ளார். காரைக்கால் தெற்கு தொகுதி திமுக எம்எல்ஏ நாஜிம் நேற்று காரைக்காலில் அளித்த பேட்டி: புதுச்சேரியில் உள்ள அனைத்து மில்களும் மூடிக்கிடக்கிறது. ஒன்றிய அரசிடம் பேசி பூட்டிய மில்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை பற்றி பேச துணை நிலை ஆளுநருக்கு நேரம் இல்லை. சென்னையில் பேசிய தமிழிசை, பா.ஜ தலைவர் என்ற பழைய நினைப்பில் தமிழ்நாடு முதலமைச்சரையும், அமைச்சர் உதயநிதியையும் தரக்குறைவாக விமர்சனம் செய்துள்ளார்.
புதுவையில் எந்த துறை அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட வில்லை. இந்தியாவில் ரேஷன் கடை இல்லாத மாநிலமாக புதுச்சேரி உள்ளது. இது குறித்து ஆளுநர் பேச வேண்டும். புதுவை யூனியன் பிரதேசத்தில் ஒன்றிய அரசு நேரடியாக ஊதியம் வழங்க நடவடிக்கை எடுப்பது குறித்து பேச வேண்டும். இதை எல்லாம் விட்டுவிட்டு தமிழ்நாட்டை பற்றி துணை நிலை ஆளுநர் தமிழிசை பேசுவதற்கு அவசியம் என்ன?.
ஒரு மாநிலத்தில் மூன்று முறை தொடர்ந்து பொறுப்பு கவர்னர் பதவி வகிப்பது என்பது இதுவே முதல் முறை. தெலங்கானாவில் இதே போல் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேச முடியுமா?. விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் அறிவித்து இரண்டு வருடங்கள் ஆகிறது. இதற்கு அரசாணை பிறப்பிப்பதற்கு துணைநிலை ஆளுநர் கையெழுத்திட வேண்டும். ஒரு பெண், துணைநிலை ஆளுநராக இருந்து கொண்டு பெண்களுக்கு எதிராக செயல்படுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.