Thursday, June 13, 2024
Home » புதுகை, திண்டுக்கல், நாமக்கலில் 2ம் நாளாக அமலாக்கத்துறை ரெய்டு

புதுகை, திண்டுக்கல், நாமக்கலில் 2ம் நாளாக அமலாக்கத்துறை ரெய்டு

by Suresh

சென்னை: தமிழ்நாடு முழுவதும் மணல் குவாரிகளை நடத்தி வருபவர்கள் தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினர். இதன் ஒரு பகுதியாக, புதுக்கோட்டை அடுத்த முத்துப்பட்டினம் குவாரி ஒப்பந்ததாரர் எஸ்.ராமச்சந்திரனின் நிஜாம் காலனி பகுதியில் உள்ள அலுவலகம், கே.எல்.கே.எஸ். நகரில் உள்ள ஆடிட்டர் முருகேசன் அலுவலகம், முத்துப்பட்டினத்தில் உள்ள அவரது வீடு, நிஜாம் காலனி ஏஎம்ஏ நகரில் உள்ள மணிவண்ணன் வீடு, வம்பன் அருகே மழைவராயன்பட்டி கிராமத்தில் உள்ள எஸ்.ராமச்சந்திரனின் உறவினர் வீரப்பனின் வீடு, கந்தர்வகோட்டை அதிமுக நிர்வாகி சண்முகம் குவாரி ஆகிய இடங்களில் அமலாக்கத் துறையினர் நேற்று முன்தினம் காலை முதல் சோதனை நடத்தினர்.

இந்நிலையில் 2வது நாளாக நேற்றும் எஸ்.ராமச்சந்திரனுக்கு தொடர்புடைய 7 இடங்களில் சோதனை நடந்தது. ஏஎம்ஏ நகரில் உள்ள மணிவண்ணன் வீட்டிலிருந்து 2 பைகளில் ஆவணங்களை எடுத்து சென்றனர். கறம்பக்குடி அருகே குளந்திரான்பட்டு கிராமத்தில் திண்டுக்கல் ரத்தினம் உறவினர் கரிகாலன் வீட்டிலும், புதுக்கோட்டை நகர் மன்ற அலுவலகம் அருகே கரிகாலனின் நண்பர் கர்ணன் என்பவரின் அலுவலகத்திலும் நேற்று சோதனை நடத்தினர்.
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் ஜிடிஎன் சாலையில் உள்ள தொழிலதிபர் ரத்தினம் மற்றும் அவருடைய மைத்துனர் கோவிந்தன் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்களில் நேற்று முன்தினம் காலை முதல் சோதனை நடந்தது. இரவு 11 மணி அளவில் கோவிந்தனின் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை முடிவுக்கு வந்தது. ரத்தினம் வீடு மற்றும் அலுவலகங்களில் 2வது நாளாக நேற்றும் சோதனைகளை தொடர்ந்தனர். மாலை 4.30 மணி அளவில் சோதனை நிறைவடைந்தது.

ரத்தினம் வீட்டில் மட்டும் 31 மணி நேரம் சோதனை நடத்தியுள்ளனர். வங்கி அதிகாரி மற்றும் நகை மதிப்பீட்டாளர் எடை இயந்திரங்களுடன் சென்று நகைகளை ஆய்வு செய்து மதிப்பிட்டுள்ளனர். குவாரிகள் தொடர்பான முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறையினர் எடுத்துச் சென்றனர்.

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே ஒருவந்தூர் பகுதியில் உள்ள மணல் சேமிப்பு கிடங்கு மற்றும் அலுவலகங்களில் 2வது நாளாக நேற்று அமலாக்கத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். நேற்று மதியம் ஒரு காரில் பொருட்களை எடுத்துசென்றனர்.

பள்ளிகொண்டா: வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரி பாலாற்றில் அரசு அனுமதி பெற்ற மணல் குவாரி செயல்பட்டு வருகின்றது. இங்கும் அமலாக்க துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் ரெய்டு நடத்தினர்.இதனால் மணல் அள்ளுவது நிறுத்தப்பட்டது. நேற்றும் 2 வது நாளாக பாலாற்று படுகையில் மணல் அள்ளுவதும், மணல் விற்பனையும் முடங்கியது.

You may also like

Leave a Comment

two × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi