சோழிங்கநல்லூர்: மத்திய சிறையில் திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு கைதி உயிரிழந்தார். இதுபற்றி, போலீசார் விசாரிக்கின்றனர். சென்னை புழல் மத்திய சிறையில் விசாரணை, தண்டனை மற்றும் பெண்கள் பிரிவில் மொத்தம் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இங்கு, பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்த சந்தானம் அருண் (எ) அருண்குமார் (43) என்பவர் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு, குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் அடைக்கப்பட்டிருந்தார்.
நேற்று முன்தினம் மாலை அருண்குமாருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு, மயங்கி விழுந்தார். அவரை, சிறைக் காவலர்கள் உடனடியாக மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி, புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.