புதுடெல்லி: வெறுப்பு பேச்சுக்களை தடுக்கும் வகையில் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களின்படி எந்த நடவடிக்கையும் எடுக்காத டெல்லி காவல்துறை அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சமூக ஆர்வலர் துஷார்காந்தி உச்சநீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் மற்றும் நீதிபதி ஜேபி பர்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது டெல்லி காவல்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், விசாரணை முடிந்து கடந்த 4ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதனை தொடர்ந்து நீதிபதிகள் அமர்வு, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டதை கருத்தில் கொண்டு தற்போதைய அவமதிப்பு மனுவை தொடர்வது நீதியின் நலனுக்கு உகந்தது அல்ல என்று கூறி மனுவை முடித்து வைத்தனர்.