ஈரோடு: ஈரோடு மீனாட்சி சுந்தரனார் சாலையில் உள்ள பெரியமாரியம்மன் கோயில் நிலத்தில் பொங்கல் வைக்க நேற்று நில மீட்பு இயக்கத்தை சேர்ந்த பெண்கள் தலையில் பானை, விறகுகளை சுமந்தபடி ஊர்வலமாக வந்தனர். சிறப்பு அழைப்பாளராக பாஜ எம்எல்ஏ சரஸ்வதி, பாஜ நிர்வாகிகள் பழனிசாமி, சரவணன் ஆகியோர் பங்கேற்று பேசினர். ஊர்வலமாக வந்த நில மீட்பு இயக்கத்தினரை ஈரோடு திருவேங்கடசாமி வீதியில் உள்ள மகிமாலீஸ்வரர் கோயில் அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, நில மீட்பு இயக்கத்தினர் அங்கேயேபோராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஆக்கிரமிப்பில் உள்ள 12.66 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி, அங்கு பக்தர்கள் பொங்கல் வைக்க உரிய ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து தர வேண்டும் என கோஷம் எழுப்பினர்.
போலீசார் கலைந்து போக கூறியும் மறுத்ததால் 415 பேரை கைது செய்து வேனில் ஏற்றினர். அப்போது, நாம எது பண்ணாலும் இந்த உலகம் உத்துப்பாக்கணும் என்பதுபோல் பாஜ எம்எல்ஏ சரஸ்வதியும் அவராகவே வேனில் ஏறி அமர்ந்தார். இதை பார்த்த போலீசார் அவரை கீழே இறங்குமாறு கூறினர். ஆனால் எம்எல்ஏ இறங்க மறுத்து வடிவேலு பாணியில், நானும் ரவுடிதான் பாணியில், ‘‘நானும் ஊர்வலத்தில் பங்கேற்றேன். என்னையும் கைது செய்யுங்கள்’’ என்றார். அதற்கு போலீசார், ‘‘நீங்கள் எம்எல்ஏவாக இருப்பதால் உடனே கைது செய்ய முடியாது. போலீசாருக்கு ஒத்துழைப்பு கொடுங்கள்’’ என்றனர். இதையடுத்து எம்எல்ஏ கீழே இறங்கினார்.