Wednesday, May 8, 2024
Home » பிரதமர் மோடியின் வாக்குறுதிகளுக்கு கேரண்டியும் இல்லை வாரண்டியும் இல்லை: ஸ்ரீவில்லிப்புத்தூர் தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

பிரதமர் மோடியின் வாக்குறுதிகளுக்கு கேரண்டியும் இல்லை வாரண்டியும் இல்லை: ஸ்ரீவில்லிப்புத்தூர் தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

by Mahaprabhu

ஸ்ரீவில்லிப்புத்தூர், மார்ச் 28: பிரதமர் மோடியின் வாக்குறுதிகளுக்கு எந்த கேரண்டியும் இல்லை, வாரண்டியும் இல்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோயிலில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், தென்காசி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ராணி குமார், விருதுநகர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூர் ஆகியோருக்கு வாக்கு கேட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தென்காசி தொகுதி வேட்பாளராக போட்டியிடும் ராணி ஸ்ரீகுமார் மருத்துவர். அரசு மருத்துவராகப் பணியாற்றிய இவர், மக்களுக்குத் தொண்டாற்ற, தன்னுடைய அரசுப் பணியிலிருந்து விலகிவிட்டு, தேர்தல் களத்திற்கு வந்திருக்கிறார். அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் மாணிக்கம் தாகூர், ஏற்கனவே உங்களுக்காகத் தன்னை ஒப்படைத்துக் கொண்டவர்.

நாடாளுமன்றத்திலும், தொலைக்காட்சி விவாதங்களிலும் தெளிவாகத் தன்னுடைய வாதங்களை வைத்து, மக்களுக்காகக் குரல் எழுப்புபவர். அவருக்கு கை சின்னத்திலும் வாக்களிக்க வேண்டும். இடஒதுக்கீடு – சமூகநீதிக்கு மிகப்பெரிய ஆபத்தை உருவாக்கும் கட்சிதான் பா.ஜ. அநியாயமாக நம்முடைய உரிமைகளை பறிக்கும் கூட்டம்தான் பா.ஜ. அதனால் தான் கூறுகிறோம், பட்டியலினத்தவர் பழங்குடியினர் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் முன்னேறுவதை பா.ஜ. எந்தக் காலத்திலும் ஏற்றுக் கொள்ளாது. இதனால்தான் ஒன்றிய அளவில் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன், சாதிவாரிக் கணக்கெடுப்பும் நடத்த வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து கேட்கிறோம், போராடுகிறோம். அதையாவது செய்கிறார்களா? அதையும் மறுக்கிறார்கள். தமிழ்நாட்டிற்கும், தமிழினத்திற்கும், தமிழுக்கும் துரோகம் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. 2014ம் ஆண்டு ராமநாதபுரத்தில் பேசிய மோடி, “சீனாவில் இருந்து பட்டாசுகள் வருவதால் குட்டி ஜப்பானான சிவகாசி பட்டாசுத் தொழில் நலிவடைந்திருக்கிறது.

பா.ஜ. ஆட்சிக்கு வந்தால், பட்டாசுத் தொழிற்சாலைகளையும், தொழிலாளர்களையும் பாதுகாப்போம்’’ என்று பேசினார். இதற்காக அவர் செயல்படுத்திக் கொடுத்த திட்டங்கள் என்ன? சட்டவிரோதமாகச் சீனப்பட்டாசுகள் இன்னும் இறக்குமதி செய்யப்படுகிறது. ஜி.எஸ்.டி வரி விதிப்பில் ஆடம்பரப் பொருள்கள் பட்டியலில் பட்டாசையும் சேர்த்து 28 விழுக்காடு வரி போட்ட கட்சிதான் பா.ஜ. பிரதமர் மோடியை மக்கள் யாருமே அவரை நம்பவில்லை. உடனே மக்களை நம்ப வைக்க இப்போது புதிய விளம்பரம் ஒன்று செய்கிறார்! என்ன தெரியுமா? தாய்மார்கள் இங்கு நிறைய பேர் வந்திருக்கிறீர்கள், ஒரு மிக்சி விளம்பரம் வருமே நினைவு இருக்கிறதா? “ப்ரீத்திக்கு நான் கேரண்டி” என்று ஒரு விளம்பரம். அந்த மாதிரி இவர், “இது மோடியின் கேரண்டி” என்ற புதிய விளம்பரத்துடன் வந்திருக்கிறார். உண்மையில் அவரின் வாக்குறுதிகளுக்கு, கேரண்டியும் இல்லை, வாரண்டியும் இல்லை.

பிரதமராக நாட்டு மக்களுக்கு நல்லது செய்யச் சொன்னால், பத்தாண்டுகளாகச் சொன்ன எதையுமே செய்யாமல், சேல்ஸ்மேன் மாதிரி கேரண்டி என்று விளம்பரம் செய்த உங்களுக்கு வெட்கமாக இல்லை? வெறும் கையால் முழம் போடுபவர் மோடி என்றால், மற்றொருவர் இருக்கிறார் பழனிசாமி. காற்றிலேயே கம்பு சுற்றுபவர். எங்கேயாவது, பா.ஜ.வையோ, மோடியையோ விமர்சித்து ஒரு வார்த்தை பேசுகிறாரா? ஆளுநரைப் பற்றிகூட பேசுவதில்லை. மக்களால் தேர்ந்தெடுத்து அனுப்பி வைக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளால் உருவாக்கப்பட்ட சட்டங்களுக்கு அனுமதி தராமல் ஆளுநர் இழுத்தடிப்பது, தமிழ்நாடு சட்டமன்றத்தை இழிவுபடுத்துவது இல்லையா? முதலமைச்சரான எனக்கு எப்படி கோபம் வருகிறதோ, அதே கோபம் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் பழனிசாமிக்கு வர வேண்டாமா? ஆளுநர் இப்படி இழுத்தடிப்பது தவறு என்று ஆளுநரைக் கேட்டிருக்க வேண்டாமா? அப்படி கேட்க மறுக்கிறார் என்றால், ஒன்று ஆளுநரைப் பார்த்து பயப்படுகிறார் என்று அர்த்தம். இல்லை, பழனிசாமிக்குச் சொரணை இல்லை என்று அர்த்தம்.

ஆளுநர் ஆர்.என்.ரவியைக்கூட எதிர்க்க முதுகெலும்பு இல்லாத பழனிசாமி, தமிழ்நாட்டை மீட்கப் புறப்படுகிறேன் என்கிறார். இதை சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? பா.ஜ. தனியாக வந்தாலும் சரி – பழனிசாமி நாடகக் கம்பெனி மூலமாக வந்தாலும் சரி அவர்களை வீழ்த்தியாக வேண்டிய கடமை தமிழ்நாட்டு மக்களுக்கு இருக்கிறது. நீங்கள் அளிக்கும் வாக்குதான் இந்தியாவைக் காப்பாற்றும். தமிழ்நாட்டைக் காப்பாற்றும். எதிர்காலத் தலைமுறையைக் காப்பாற்றும். பாசிசத்தை வீழ்த்த இந்தியாவைக் காக்க உங்கள் ஸ்டாலின் அழைக்கிறேன். நாற்பதும் நமதே, நாடும் நமதே. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

You may also like

Leave a Comment

one + 17 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi