திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே ஆக்கிரமிப்பு பிடியில் இருந்து சுமார் 3 கோடி மதிப்பு அரசு நிலம் மீட்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி வட்டம், கோபுரசநல்லூர் கிராமத்தில் குட்டை மற்றும் சாலை புறம்போக்கு வகைப்பாடு கொண்ட நிலத்தில் 15 கடைகள் கட்டப்பட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தன. இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
இந்தநிலையில் மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ராஜ்குமார் ஆகியோர் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதையடுத்து பூந்தமல்லி வட்டாட்சியர் இரா.மாலினி தலைமையில் மண்டல துணை வட்டாட்சியர் கவிதா, வருவாய் ஆய்வாளர் சரண்யா, காட்டுப்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் முருகானந்தம் மற்றும் கிராம உதவியாளர்கள் ஆகியோர் போலீஸ் பாதுகாப்புடன் வந்தனர்.
பின்னர் அவர்கள் அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்டிருந்த கடைகளை அதிரடியாக அகற்றி சுமார் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலத்தினை மீட்டனர். மேலும் ஆக்கிரமிப்பு இடங்களை வரும் 5 நாட்களில் காலி செய்துவிட வேண்டும் என்று கால அவகாசம் வழங்கப்பட்டது.