சென்னை: கடந்த 1996 ஏப்ரல் 13 முதல் 2001 மார்ச் 31 வரையான காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக ஒரு கோடியே 36 லட்சத்திற்கு சொத்து சேர்த்ததாக அப்போதைய அமைச்சராக இருந்த க.பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை பதிவுசெய்த வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்திலிருந்து வேலூர் நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்ற நிர்வாக உத்தரவின்படி மாற்றப்பட்டது. இந்த வழக்கில் இருந்து இருவரையும் 2023 ஜூனில் வேலூர் நீதிமன்றம் விடுவித்த தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து மறு ஆய்வு வழக்காக 2023 ஆகஸ்ட் மாதம் விசாரணைக்கு எடுத்தார். இந்த வழக்கின் இறுதி விசாரணை பிப்ரவரி 19 முதல் 22 வரை நடைபெறும் என்றும், இருவரையும் விடுதலை செய்த வேலூர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி வசந்தலீலா பிப்ரவரி 23ல் நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ வாதங்களை முன்வைக்கலாம் எனவும் நீதிபதி அறிவித்திருந்தார். இந்நிலையில், பொன்முடி தரப்பு கோரிக்கையை ஏற்று, இந்த வழக்கு மார்ச் 12 முதல் 15ம் தேதி வரை விசாரிப்பதாக தெரிவித்தார்.