சென்னை: கூட்டுறவு சங்கங்களுக்கு சொந்தமான நிலங்களில் ஆக்கிரமிப்பு இருந்தால் உடனே அகற்ற அதிகாரிகளுக்கு அமைச்சர் தாமோ அன்பரசன் அறிவுறுத்தியுள்ளார். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நேற்று சென்னை கிண்டியில் உள்ள தொழில் ஆணையர் தலைமை அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட தொழில் மைய மேலாளர்களின் திறனாய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தலைமையேற்று திறனாய்வு மேற்கொண்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது: மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 3362 குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் கடன் கோரி விண்ணப்பித்ததில் 819 நிறுவனங்களுக்கு ரூ.21.67 கோடி கடன், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தால் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் மக்களுடன் முதல்வர் திட்டத்தில் 4555 மனுக்கள் பெறப்பட்டு கடன் வழங்குவதற்காக வங்கிகளுக்கு 2577 விண்ணப்பங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.குறுங்குழும மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இதுவரை 37 குழுமங்கள் ஒப்பளிப்பு செய்யப்பட்டு ரூ. 147.41 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது . அதிக பயனாளிகள் தொழில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவு சங்கங்களுக்கு சொந்தமான நிலங்கள் குறித்த விவரங்களை சேகரித்து அதில் ஆக்கிரமிப்பு ஏதேனும் இருந்தால் அதை உடனடியாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் அரசு செயலர் அர்ச்சனா பட்நாயக், கூடுதல் ஆணையர் கிரேஸ் பச்சாவ், கூடுதல் இயக்குநர் மருதப்பன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.