சென்னை: தென்காசி மாவட்டம் கடையம் பகுதியை சேர்ந்த 52 பேர் சுற்றுலா சென்றபோது பேருந்து கட்டுபாட்டை இழந்து விபத்துள்ளானதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். கே.எஸ்.அழகிரி : உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக முதலமைச்சர் தலா ரூ.2 லட்சம், படுகாயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சைக்காக ரூ.1 லட்சம் நிவாரண நிதியில் இருந்து வழங்கியிருக்கிறார்.
பொதுவாக சுற்றுலா பேருந்து பயணத்தின்போது நீண்டதூரம் போய் வருகிற சூழலில் ஒரே ஓட்டுனரை மட்டும் நம்பி பயணிக்கிறது. சோர்வு, தூக்கத்தின் காரணமாக இத்தகைய விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே இத்தகைய சுற்றுலா பயணங்களில் 8 மணி நேரத்திற்கு ஒரு ஓட்டுநர் என்ற அடிப்படையில் மாற்று ஓட்டுனர்களை உறுதி செய்கிற வகையில் உரிய நடவடிக்கைகளை சுற்றுலாத்துறையும், போக்குவரத்துத்துறையும் எடுக்க வேண்டும்.
ஜி.கே.வாசன் : சுற்றுலா செல்லும் முன் வானங்களை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். மலை பிரதேசங்களில் பயணம் செய்யும் போது மிகுந்த கவனத்துடனும் மிகுந்த அனுபம் வாய்ந்த ஓட்டுநர்களை கொண்டு பேருந்தை இயக்க வேண்டும்.
வைகோ : மேட்டுப்பாளையம் குன்னூர் சாலையில், குன்னூர் மரப்பாலம் அருகே வந்துகொண்டிருந்தபோது, ஓட்டுரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்த தடுப்பை இடித்துக்கொண்டு 80 அடி பள்ளத்தில் கவிந்துவிட்டது. இதனால், 9 பேர் பலியாகி உள்ள செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். இந்த விபத்தில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமுற்று சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு அரசு உரிய சிகிச்சை அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.