திருவள்ளூர்: ஆரம்பாக்கத்தில் பாஜக பிரச்சார கூட்டத்தில் பங்கேற்க பெண்களுக்கு பணம் கொடுத்த பாஜக நிர்வாகி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் தொகுதி பாஜக வேட்பாளர் பொன்.பாலகணபதி தமிழ்நாடு- ஆந்திர எல்லை பகுதியில் உள்ள குமிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆரம்பாக்கம் சுற்றுவட்டார கிராமங்களில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது கூட்டம் சேர்த்ததாக பல்வேறு ஆட்களை அழைத்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
பாஜக வேட்பாளர் அங்கிருந்து தனது பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு செல்லும் போது பிரச்சாரத்துக்காக அழைத்து வரப்பட்ட ஆட்களுக்கு பாஜக நிர்வாகி ஓருவர் 5 நபர்களுக்கு தலா ரூ.500 வழங்கினார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. கூட்டத்துக்காக அழைத்து வரப்பட்ட ஆட்களுக்கு பணம் கொடுத்த வீடியோ வைரலானதை தொடர்ந்து குமிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் பறக்கும் படை அதிகாரி சம்பத் இது தொடர்பாக ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் புகாரின் அடிப்படையில் நொச்சிக்குப்பம் பகுதியை சேர்ந்த குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.