ஈரோடு: அரசு பள்ளி ஆசிரியை கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஆசிரியையின் கணவர் உட்பட 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு கொல்லம்பாளையம் வஉசி வீதியை சேர்ந்தவர் மனோகரன் (62). ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர். இவரது மனைவி புவனேஸ்வரி (54). ஈரோடு வைராபாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். குழந்தைகள் இல்லை. நேற்று காலை 6.30 மணியளவில் மனோகரன் நடை பயிற்சிக்கு சென்றுவிட்டு காலை 8 மணியளவில் வீட்டிற்குள் வந்துள்ளார். நீண்ட நேரம் ஆகியும் புவனேஸ்வரி எழுந்திருக்காததால், படுக்கை அறைக்கு சென்று மனோகரன் பார்த்தார்.
அங்கு புவனேஸ்வரி கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட காயத்துடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். தகவலறிந்து ஈரோடு தெற்கு போலீசார் வந்து விசாரணை நடத்தினர். புவனேஸ்வரி அணிந்திருந்த ஆறரை பவுன் செயின் மாயமாகி இருந்தது. போலீஸ் மோப்ப நாய் வீரா வீட்டிற்குள்ளேயே சுற்றி, சுற்றி வந்தது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதையடுத்து புவனேஸ்வரியின் கணவர் மனோகரன், மேல் மாடியில் தனியாக வசிக்கும் திருமணம் ஆகாத தனியார் பள்ளி ஆசிரியரான பல்ராம் (30) ஆகிய இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.