பொன்னேரி: பொன்னேரி பஜாரில் ரவுடிகள் இருவர் பட்டாக்கத்தியுடன் திரிந்து பொதுமக்களை கஞ்சா போதையில் பயமுறுத்தி வந்த நிலையில் இருவரும் போலீசாரால் கைது ெசய்யப்பட்டனர். ஆவடி காவல் ஆணையரகம் பொன்னேரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பஜாரில் நேற்றுமுன்தினம் இரவு பட்டாக்கத்தியுடன் 2 ரவுடிகள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சாலையில் சென்று கொண்டிருந்த வாலிபர்களை விரட்டிச் சென்றனர். ரவுடிகளை பார்த்ததும் அங்கிருந்த பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதில், ரவுடிகள் இருவரும் கஞ்சா போதையில் இருப்பதாக பொன்னேரி போலீசுக்கு சமூக ஆர்வலர்கள் தகவல் தெரிவித்தனர்.
உடனே, ரோந்து பணியில் இருந்த பொன்னேரி போலீசார் பட்டாக்கத்தியுடன் சுற்றித்திரிந்த இரண்டு இளம் ரவுடிகளைப் பிடித்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். விசாரணையில் அவர்கள் பொன்னேரி வேண்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விஜய் மற்றும் ராகேஷ் என்பது தெரிய வந்தது. இவர்கள் பகல் நேரத்தில் பட்டாக்கத்தியை காட்டி கடைகளில் மாமுல் வசூலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இவர்கள் பட்டாக்கத்தியுடன் பொதுமக்களை பயமுறுத்தும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானதால் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை உண்டாக்கி உள்ளது.