Saturday, April 27, 2024
Home » கட்சிகளுக்கு தேர்தல் சின்னம் பாரபட்சம் காட்டும் ஆணையம்: பாஜ கூட்டணிக்கு ஒரு நியாயம்; மற்றவர்களுக்கு அநியாயம்

கட்சிகளுக்கு தேர்தல் சின்னம் பாரபட்சம் காட்டும் ஆணையம்: பாஜ கூட்டணிக்கு ஒரு நியாயம்; மற்றவர்களுக்கு அநியாயம்

by MuthuKumar

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19 அன்று 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 30 கடைசி நாளாகும். அன்று மாலை அங்கீகாரம் பெறாத பதிவு செய்யப்பட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சைகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.

இதில், குறிப்பிட்ட சின்னங்களைக் கேட்டு விண்ணப்பித்த அங்கீகாரம் பெறாத ‘நாம் தமிழர்’ (மைக்) போன்ற கட்சிகளுக்கு ஏற்கெனவே சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டன. இதேபோல பாஜக கூட்டணியில் இருக்கும் அங்கீகரிக்கப்படாத மற்றும் பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கும் சின்னங்கள் ஒதுக்கப்பட்டு விட்டன. குறிப்பாக, பாஜக கூட்டணியிலுள்ள டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக-வுக்கு அவர்கள் கேட்டபடியே குக்கர் சின்னம், ஜி.கே. வாசன் தலைமையிலான தமாகாவுக்கு அவர்கள் கேட்ட சைக்கிள் சின்னம் உடனடியாக ஒதுக்கப்பட்டது.
ஆனால், திமுக தலைமையிலான கூட்டணியில் இருக்கும் மதிமுக, விசிக ஆகிய கட்சிகளுக்கு அவர்கள் கோரிய பம்பரம், பானை சின்னம் ஒதுக்கப்படவில்லை. முன்கூட்டியே விண்ணப்பித்தும் உரிய பதிலும் அளிக்கப்படவில்லை.

ஒரு தொகுதியில் போட்டியிடுவதால் மதிமுகவுக்கு பம்பரம் சின்னத்தை மறுப்பதாக தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. ஆனால், விசிக 6 மாநிலங்களில் சுமார் 20க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடுகிறது. அவ்வாறிருந்தும் பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்தது. இதன்மூலம் தேர்தல் ஆணையத்தின் ஒருதலைபட்சமான செயல்பாடு வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சின்னங்களை மறுப்பதன் மூலம் ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளைக் கண்டு பாஜக அச்சம் அடைந்திருப்பது நன்றாக தெரிவதாகவும் ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும், பாஜ கூட்டணிக்கு கட்சிக்கு தேர்தல் ஆணையம் நியாயம் செய்வதாகவும், மற்ற கட்சிகளுக்கு அநியாயம் செய்வதாகவும் வேதனை தெரிவித்தனர்.

கிருஷ்ணசாமி
புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கே. கிருஷ்ணசாமி, தமது கட்சிக்கு டிவி சின்னம் ஒதுக்கக்கோரி விண்ணப் பித்திருந்தார். அவரது கோரிக்கையை ஏற்க மறுத்த தேர்தல் ஆணையம், டிவி சின்னத்தை ஒதுக்க முடியாது என்று கூறி விட்டது. இதையடுத்து, தென்காசி தொகுதியில் இரட்டை இலை சின்னத்தி லேயே போட்டியிட உள்ளதாக டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் கைதான டிடிவி தினகரனுக்கு அவர் கேட்ட சின்னத்தை தேர்தல் கமிஷன் ஒதுக்கி இருப்பது அவர் பாஜ கூட்டணியில் இருப்பதாலா என்று அரசியல் நோக்கர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இரட்டை இலை சின்னம் பெற தேர்தல்
கமிஷனுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் கைதான டிடிவி தினகரனுக்கு அவர் கேட்ட சின்னத்தை தேர்தல் கமிஷன் ஒதுக்கி இருப்பது அவர் பாஜ கூட்டணியில் இருப்பதாலா என்று அரசியல் நோக்கர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

You may also like

Leave a Comment

twenty − two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi