சென்னை : ஒரு நூற்றாண்டுக்கு முன்பே இன்றைய திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பதிவில்,”எல்லா வகையிலும் உரிமைகள் மறுக்கப்பட்டிருந்த பார்ப்பனரல்லாத மக்களின் எழுச்சிக்கும் – வளர்ச்சிக்கும் வித்திட்ட ‘Non-Brahmin Manifesto’ எனும் கொள்கை அறிக்கையை வெளியிட்டு, தமிழ்நாட்டின் அரசியல் போக்கை நிரந்தரமாக மாற்றியமைத்த ‘வெள்ளுடை வேந்தர்’ தியாகராயரின் பிறந்தநாள் இன்று.
ஒரு நூற்றாண்டுக்கு முன்பே இன்றைய திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர். கல்வியிலும், அரசு வேலைவாய்ப்பிலும் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் இடம்பெற வழிவகுத்த திராவிட இனத்தின் கம்பீரத் தலைவர்.’வெள்ளுடை வேந்தர்’ தியாகராயர் அவர்களின் சமூகநீதிப் பணிகளை என்றென்றும் நினைவுகூர்வோம். தியாகராயர் புகழ் ஓங்கட்டும்!,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தமிழ்நாடு அரசின் சார்பில், ‘வெள்ளுடை வேந்தர்’ சர்.பிட்டி தியாகராயர் அவர்களின் 173-வது பிறந்த நாளை முன்னிட்டு அன்னாரது திருவுருவப் படத்திற்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.