நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டம், போக்குவரத்துத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திரரெட்டி தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் போக்குவரத்துத் துறை ஆணையர், காவல்துறை உயர் அலுவலர்கள், அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள் கலந்து கொண்டனர். வரும் 17, 18ம் தேதிகளில் சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன், 2,970 சிறப்புப் பேருந்துகள் என 2 நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக, 7,154 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட இரண்டு நாட்களுக்கு 3,060 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 10,214 பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டது.
நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பின்னர், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு வர 20 மற்றும் 21ம் தேதிகளில், தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன், 1,825 சிறப்புப் பேருந்துகளும் இரண்டு நாட்களும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 6,009 பேருந்துகள் ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 2,295 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 8,304 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. tnstc official app மற்றும் www.tnstc.in போன்ற இணையதளங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்யலாம். பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கு ஏதுவாக, 94450 14450, 94450 14436 ஆகிய தொலைபேசி எண்களை (24×7) மணி நேரமும் தொடர்பு கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இதுமட்டுமின்றி, பயணிகளின் நலன் கருதி, கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதுமான அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பேருந்து இயக்கத்தை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை (Control Room) 24 மணி நேரமும் செயல்பட உள்ளது. பொதுமக்களின் வசதிக்காக கோயம்பேடு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்திலிருந்து மேற்கூறிய 3 பேருந்து நிலையங்களுக்கு செல்ல ஏதுவாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இணைப்புப் பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.