சென்னை: அடுக்குமாடி குடியிருப்பில் கார் விடுவதில் ஏற்பட்ட தகராறில் சென்னை கூடுதல் கமிஷனர் செந்தில் குமாரியின் காரை சேதப்படுத்தியதாக ஐஏஎஸ் அதிகாரி ஷில்பா கார் ஓட்டுநரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை விருகம்பாக்கத்தில் தாய்ஷா அபார்ட்மென்ட் உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் வசித்து வருகின்றனர். சென்னை மாநகர காவல்துறை மத்திய குற்றப்பிரிவில் கூடுதல் கமிஷனராக பணியாற்றி வரும் செந்தில் குமாரியும் அந்த குடியிருப்பில் வசித்து வருகிறார். இவருக்கு தலைமை காவலர் பழனிபாரதி(45) என்பவர் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை பழனிபாரதி தனது காரை பார்க்கிங் பகுதியில் நிறுத்தியுள்ளார். அப்போது, குடியிருப்பில் எப் பிளாக் 3வது மாடியில் வசித்து வரும் ஐஏஎஸ் அதிகாரி ஷில்பா என்பவரின் கார் ஓட்டுனர் சந்திரமோகன், கூடுதல் கமிஷனர் செந்தில்குமாரியின் காரின் முன் பக்கம் உரசி சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காவலர், சந்திரமோகனிடம் கேட்டதற்கு ‘காரின் சேதத்தை சரி செய்து தருவதாக கூறியுள்ளளார்’. பிறகு மதியம் காவலர் எப்போது சரி செய்து கொடுக்க போகிறீர்கள் என்று கேட்டதற்கு, அவர், நீங்களே சரிசெய்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. அதைதொடர்ந்து கூடுதல் கமிஷனரின் கார் ஓட்டுனர் பழனிபாரதி சம்பவம் குறித்து விரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் மீது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.