பெரம்பூர்: வங்கியில் இருந்து ரிவார்ட் வந்துள்ளதாக மெசேஜ் அனுப்பி இளைஞரிடம் நூதன முறையில் ரூ.44 ஆயிரம் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புளியந்தோப்பு டிம்லர்ஸ் ரோடு பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பங்கஜ் (34). இவர் மவுண்ட் ரோட்டில் உள்ள ஒரு எலக்ட்ரானிக் கடையில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் இவரது செல்போனுக்கு எஸ்பிஐ வங்கியில் இருந்து வருவது போன்று ஒரு குறுந்தகவல் வந்தது. அதில், உங்களது வங்கி கணக்கிற்கு ரிவார்டு வந்துள்ளது என தகவல் இருந்தது. அதன் பிறகு பங்கஜின் வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்களை ஆன்லைன் மூலம் கேட்டுள்ளனர். அதன்படி பங்கஜ் விவரங்களை பதிவு செய்துள்ளார்.
இதனையடுத்து பங்கஜ் மொபைலுக்கு ஒரு ஓடிபி வந்துள்ளது. அதனை அவர் பதிவு செய்ததும் அவரது வங்கி கணக்கில் இருந்த ரூ.44 ஆயிரம் பறிபோனது. இதனால் அதிர்ச்சி அடைந்த பங்கஜ், மிண்ட் பகுதியில் உள்ள எஸ்பிஐ வங்கிக்கு சென்று இதுகுறித்து புகார் அளித்துவிட்டு, புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாட்ஸ் அப் மற்றும் மெசேஜில் வரும் எந்த ஒரு தேவையில்லாத குறுந்தகவல்களை தொட வேண்டாம். ஓடிபி உள்ளிட்ட விவரங்களை கையாளும்போது கவனமுடன் இருக்க வேண்டும், என சைபர் கிரைம் போலீசார் எவ்வளவு தான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், தொடர்ந்து வங்கியில் இருந்து மெசேஜ் வருவது போன்று குறுந்தகவல்களை அனுப்பி தொடர்ந்து பொதுமக்கள் பணத்தை இழந்து வருவது தொடர் கதையாகி வருகிறது.