தேவையானவை:
பசலைக்கீரை – ஒரு கட்டு,
பனீர் – 200 கிராம்,
வெங்காயம் – கால் கப் (நறுக்கியது),
தக்காளி – 2,
இஞ்சி – சிறிதளவு,
பச்சை மிளகாய் – 3,
கிரீம் – 2 டீஸ்பூன்,
தயிர் – கால் கப்,
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள், கரம் மசாலாத்தூள் – தலா கால் டீஸ்பூன்,
எண்ணெய் – 2 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
பசலைக்கீரையை சுடுநீரில் போட்டு, சிறிது நேரம் கழித்து எடுத்து, அத்துடன் பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும். இத்துடன் சிறிது கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும். பனீரை சதுரம் சதுரமாக வெட்டி, அதன் நடுவில் அரைத்த கீரையை வைத்து ஒட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாயை சேர்த்து அரைத்துக்கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதனுடன் அரைத்த தக்காளி விழுது சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு மிளகாய்த்தூள், சிறிது கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து, பச்சை வாசனை போகும்வரை வதக்கி, தயிர், கிரீம், உப்பு சேர்த்துக் கிளறவும். சிறிதளவு தண்ணீர், பொரித்த பனீர் சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடம் கொதிக்க விடவும். நன்கு கொதித்த பின் இறக்கிப் பரிமாறவும்.