தென்காசி : குற்றாலம் மெயின் அருவியில் திடீர் வெள்ளப் பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் குற்றாலத்தில் தற்போது சீசன் காலம் என்பதால் குற்றால அருவிகளில் குளித்து மகிழ பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். நடப்பாண்டில் குற்றால சீசன் சற்று தாமதமாக தொடங்கிய போதிலும் அருவிகளில் தண்ணீர் கொட்டி வருகிறது. இதில் சுற்றுலா பயணிகள் அனந்த குளியல் போடு வருகின்றனர்.
மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை விட்டு விட்டு சாரல் மழை தொடர்ந்து பெய்து வருவதால் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக குற்றால மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. மெயின் அருவியில் குளித்து மகிழ வந்த சுற்றுலா பயணிகள் சற்று ஏமாற்றமடைந்தனர். மேலும் ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.