மண்டபம்: பாம்பன் மீனவர்கள் வலையில் சிக்கிய சூடை மீன்களை வியாபாரிகள் அதிக விலைக்கு வாங்கி சென்றதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ராமேஸ்வரம் பாம்பன் வடக்கு கடலோர பகுதியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டுப் படகில் மீனவர்கள் மீன் பிடித்து வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை நாட்டுப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர். இரவு முழுவதும் மீன்கள் பிடித்துக் கொண்டு நேற்று காலையில் பாம்பன் வடக்கு கடற்கரைக்கு வந்தனர். மீனவர்கள் பிடித்து வந்த வலையில் சிக்கிய மீன்களை கரையோரத்தில் வைத்து பிரித்து எடுத்தனர்.
அப்போது 50க்கும் மேற்பட்ட நாட்டுப்படகு ஒவ்வொன்றிலும் 500 கிலோ வரை சூடை மீன்கள் கிடைத்திருந்தது. இந்த சூடை மீன்களை வியாபாரிகள் ஒரு கிலோ ரூ.100 வரைக்கும், சேதமடைந்த சூடை மீன்களை ரூ.15 முதல் 30 வரை விலை கொடுத்தும் வாங்கி சென்றனர். அதுபோல மாவுலா மீன்கள், பாறை மீன்கள் உட்பட ஏராளமான மீன்கள் கிடைத்திருந்தது. ஆனால் அதிகமான விலைக்கு வியாபாரிகள் வாங்கிச் சென்றதால் மீனவர்களுக்கு அதிக லாபம் கிடைத்தது. இதனால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.