கடலூர்: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் சுற்றுவட்டார கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்டிருக்கும் நெற்பயிரில் இலைச்சுருட்டுப் புழு தாக்குதல் அதிகமாகி வருவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். காட்டுமன்னார்கோவில் குமராட்சியை சுற்றி 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் 44,500 ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. திருமூலஸ்தானம், திருநாரையூர், புளியங்குடி, வெள்ளூர், பருத்திக்குடி, கீழக்கரை, நலன்புத்தூர் உள்ளிட்ட உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் நெல் பயிரிட்டிருக்கிறார்கள்.
ஆனால் சமீபத்திய மழையால் இலைச்சுருட்டுப் புழு தாக்குதல் நெற்பயிரில் அதிகமாக காணப்படுகிறது. இதனால் அச்சமடைந்திருக்கும் விவசாயிகள் உடனடியாக அதனை கட்டுப்படுத்தாவிட்டால் 50 முதல் 90 விழுக்காடு மகசூல் இழப்பு ஏற்படும் என கவலை தெரிவிக்கின்றனர். வேளாண்துறை அதிகாரிகள் இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் மானிய விலையில் மருந்துகள் வழங்கி பயிர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்.