டெல்லி: ஒடிசா ரயில் விபத்து குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானது. அதில் சிக்கிய பயணியரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் 900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், சுமார் 288 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஒடிசா கோர ரயில் விபத்து தொடர்பாக அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது, இந்த கோர விபத்து எப்படி ஏற்பட்டது என பவர் பாயிண்ட் பிரசன்டேஷன் மூலம் அதிகாரிகள் விளக்கமளித்தனர். மீட்பு மற்றும் மீட்கப்பட்டவர்களின் நிலை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துவது குறித்தும், விபத்துக்கான காரணம் குறித்தும் பிரதமர் மோடி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மீட்புப் பணிகளை துரிதப்படுத்தவும் அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் ரயில் விபத்து நடைபெற்ற ஒடிசா மாநிலத்திற்கு பிரதமர் மோடி புறப்பட்டார். விபத்து நடந்த இடத்தை பார்வையிடும் பிரதமர் மோடி கட்டாக் மருத்துவமனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெறுபவர்களை விசாரிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.