திருவள்ளூர்: ஓசியில் டீசல் போட்டுவிட்டு பங்க் உரிமையாளரை மிரட்டியவரை திருவள்ளூர் தாலுகா போலீசார் கைது செய்தனர். திருப்பாச்சூரில் பெட்ரோல் பங்க் நடத்தி வருபவர் நாராயணராவ் என்பவரது மனைவி புவனேஸ்வரி (45). இந்த பங்கில் திருப்பாச்சூர் பெரிய காலனி பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்பவர், கடந்த மாதம் பங்க் ஊழியர் ஒருவரிடம் 40 லிட்டர் டீசல் வாங்கிவிட்டு பணம் தராமல் சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு அதே பங்கில் வேலை செய்யும் வேறு ஒரு ஊழியரிடம் ரூ.3,500க்கு டீசல் போட்டுவிட்டு பணம் தராமல் சென்றுள்ளார். இதுகுறித்து பங்க் உரிமையாளர் புவனேஸ்வரி, பாலாஜியின் சகோதரியிடம் டீசல் போட்டுவிட்டு பணம் தராமல் போனது குறித்து தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த மாதம் 17ம் தேதி பெட்ரோல் பங்கிற்கு வந்த பாலாஜி, அங்கே வேலை செய்யும் சீனிவாசன் என்பவரது செல்போனில் இருந்து புவனேஸ்வரியின் கணவர் நாராயணராவுக்கு கால் செய்து, அவரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதுகுறித்து மீண்டும் அவரது சகோதரியிடம் புவனேஸ்வரி தெரிவித்துள்ளார். இதனையடுத்து இம்மாதம் 9ம் தேதி இரவு 8 மணியளவில் புவனேஸ்வரியை பாலாஜி மிரட்டி விட்டுச் சென்றுள்ளார். இந்நிலையில் நேற்றுமுன் தினம் புவனேஸ்வரி திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலாஜியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.