சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு ரூ.2000 மட்டுமே ஓய்வு ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இது போதுமானதல்ல. அதை உயர்த்தி வழங்க வேண்டும். சத்துணவுப் பணியாளர்களில் பெரும்பான்மையினர் மாற்றுத்திறனாளிகள். அதை கருத்தில் கொண்டு தான் அவர்களுக்கான ஓய்வூதியம் தீர்மானிக்கப்பட வேண்டும். ஆனால், அதுகுறித்தெல்லாம் கவலைப்படாமல் அனைவருக்கும் ஒரே ஓய்வூதியம்.
அது மாதத்திற்கு ரூ.2000 மட்டும் தான் என்பது நியாயமல்ல. இது ஒரு நாளைக்கு ரூ.100 விடக் குறைவு. இதை வைத்துக் கொண்டு அடிப்படையான தேவைகளைக் கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாது. அதைக் கருத்தில் கொண்டு ஓய்வூதியம் உயர்த்தப்பட வேண்டும். சத்துணவு அமைப்பாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.10,000 நிர்ணயிக்கப்பட வேண்டும். அத்துடன் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு உதவித் தொகையாக தனியாக மாதம் ரூ.3000 வழங்கப்பட வேண்டும். அதன்மூலம் சத்துணவுப் பணியாளர்களின் ஓய்வுக்காலத்தை நிம்மதியானதாக மாற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.