ராஜ்கோட்: ராஜ்கோட்டைச் சேர்ந்த மாற்றுத்திறன் மாணவர் ஸ்மித் சேஞ்சேலா, தனது மூக்கின் நுனியில் செல்போனில் டைப் செய்யும் கலையை கற்று சாதித்துள்ளார். குஜராத் மாநிலம் ராஜ்கோட்டைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஸ்மித் சேஞ்சேலா என்ற பட்டதாரி மாணவருக்கு, சிறுவயதில் இருந்தே நரம்பியல் நோய் பாதிப்பு இருந்து வருகிறது. தனக்கு ஏற்பட்ட உடல் பாதிப்பை காரணம் காட்டி, அவர் எந்த வேலையும் செய்யாமல் சும்மா இருக்கவில்லை. மாறாக சவால்களை எதிர்கொண்டு தற்போது பி.காம் படித்துக் கொண்டே யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராக வருகிறார்.
தகவல் பரிமாற்றங்களுக்காக செல்போனில் தனது கையால் தட்டச்சு செய்யும் போது, அவரது கைவிரல்களுக்கு வலி ஏற்பட்டது. அதனால் அவர் தனது மூக்கின் நுனியில் தட்டச்சு செய்யத் தொடங்கி, அதற்காக தீவிர பயிற்சி மேற்கொண்டார். முதலில் கொஞ்சம் சிரமப்பட்டாலும், தற்போது மிக வேகமாக மூக்கின் நுனியில் டைப் செய்கிறார். நிமிடத்திற்கு 151 எழுத்துக்கள் அல்லது 36 வார்த்தைகளை தட்டச்சு செய்கிறார். அவரது சாதனையை பாராட்டி ‘இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளியான ஸ்மித் சேஞ்சேலா, புதுமையாக யோசித்து சாதித்து வருவதை பலரும் பாராட்டி வருகின்றனர்.