திருமலை: வட இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட தீவிரவாத கும்பலை சேர்ந்த பெண் உட்பட 4 பேரை குஜராத் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். குஜராத் மாநிலம் சூரத் நகரை சேர்ந்தவர் சுமேராபானு(32). இவர் ஆன்லைனில் சர்வதேச தீவிரவாத அமைப்பின் துணை அமைப்பான ஐஎஸ்கேபி என்ற தீவிரவாத அமைப்புடன் சாட்டிங் செய்துள்ளார். வட இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இதற்காக அபு ஹம்சலா மூலம் சுமேராபானுவுக்கு அறிமுகமான நகரை சேர்ந்த 4 பேரை கொண்டு ஒரு குழுவை உருவாக்கி உள்ளார். இதில் உபேத் நசீர் மிர், ஹனன் ஹயாத் சோல் மற்றும் முகமது ஹசிம் ஷா ஆகியோரை குஜராத்தில் உள்ள போர்பந்தருக்கு சுமேராபானு வரவழைத்துள்ளார். அங்கு ஒரு ஓட்டலில் தங்கி 4 பேரும் தீவிரவாத தாக்குதலுக்கு சதி செய்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த குஜராத் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரிகள், கடந்த 9ம் தேதி ஓட்டலில் அதிரடி சோதனை நடத்தி சுமேரபானு உள்பட 4 பேரையும் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின்பேரில், ஸ்ரீநகரை சேர்ந்த ஜுபைர் அகமதுமுன்ஷி என்பவரும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். மேலும் சுமேராபானுவிடம் நடத்திய விசாரணையில், அவர் ஐதராபாத்தில் தனது முகாமை அமைக்க முயன்றது தெரியவந்தது. இதற்காக சமூக வலைதளங்கள் மூலம் அறிமுகமான ஐதராபாத் காலாபட்டர் பகுதியை சேர்ந்த மெடிக்கல் கடை உரிமையாளர், அமீர்பேட்டை சேர்ந்த ஐடி நிறுவனத்தின் பயிற்சியாளராக பணிபுரிந்து வரும் சாதிக் மற்றும் அவருடைய மகள் ஆகியோருடன் தொடர்ந்து பேசி வந்துள்ளார். மேலும் ஐதராபாத்தில் ஆசிரியர் வேலை வாங்கி தருமாறு கேட்டு வந்துள்ளார். இதனை தொழில்நுட்ப ரீதியாக உறுதிப்படுத்திய தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரிகள் ஐதராபாத் வந்தனர். பின்னர் காலாப்பட்டாரில் உள்ள மெடிக்கல் கடை உரிமையாளர், ஐடி நிறுவன பயிற்சியாளர் சாதிக் மற்றும் அவருடைய மகள் ஆகிய 3 பேரையும் நேற்று முன்தினம் கைது செய்தனர். தொடர்ந்து இவர்களிடம் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.