நெல்லை: நெல்லை பைக்கில் சென்ற வாலிபர் நேற்று வெட்டிபடுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை ரெட்டியார்பட்டி ஜான்சன்நகர், சாய்பாபா கோயில் அருகே நேற்று காலை பைக்கில் வந்த வாலிபரை வழிமறித்து மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
கொலையாளிகள் அங்கிருந்து பைக்கில் தப்பிச் சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வாலிபர் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் கொலையானவர் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே உள்ள கருங்குளம் புளியங்குளத்தைச் சேர்ந்த பாண்டியன் மகன் முத்துபெருமாள் (27) என்பது தெரியவந்தது.
இந்நிலையில் நெல்லை மேலப்பாளையம் கருங்குளம் சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது ஒரே பைக்கில் வேகமாக 3 வந்தனர். இதையடுத்து அவர்களை பிடிக்க போலீசார் முயன்றனர். ஆனால் அவர்கள் தப்பி ஓட்டி விட்டனர். இதையடுத்து முன்னீர்பள்ளம் பகுதியில் வைத்து போலீசார் அந்த பைக்கை தடுத்து நிறுத்தி2 பேரை மடக்கி பிடித்தனர். ஒருவர் தப்பி ஓடிவிட்டார். அப்போது பைக்கில் மறைத்து வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதில், அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே உள்ள தெற்கு காரசேரி கிராமத்தைச் சேர்ந்த இசக்கிபாண்டியன், முத்துகிருஷ்ணன் என்பது தெரியவந்தது. தப்பியோடியவர் அதே பகுதியை சேர்ந்த உய்க்காட்டான் என்பதும் தெரிந்தது. அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.