ஆவடி: ஆவடி அருகே நடைபெற்ற நீட் விலக்கு கையெழுத்து இயக்கத்தில் 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். ‘நீட் விலக்கு நம் இலக்கு’ மாபெரும் கையெழுத்து இயக்கத்தின் ஒரு அங்கமாக திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக இளைஞரணி, மாணவரணி சார்பில் கல்லூரி மாணவர்களிடம் கையெழுத்து பெறும் நிகழ்ச்சி ஆவடி அடுத்த நெமிலிச்சேரி ரயில் நிலையம் அருகில் நேற்று நடைபெற்றது. திருவள்ளூர் மத்திய மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மத்திய மாவட்டச் செயலாளர் சா.மு.நாசர் எம்எல்ஏ, தெற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களிடம் கையெழுத்து பெறும் பணிகளை பார்வையிட்டனர்.
மேலும் நீட் விலக்கு குறித்து துண்டு பிரசுரங்களை மாணவர்களுக்கு வழங்கிய சா.மு.நாசர் எம்எல்ஏ, நீட்தேர்வை ரத்து செய்ய மாணவர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இதில் சுமார் 1,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் நீட் விலக்குக்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டுச் சென்றனர். இந்த நிகழ்வில் திருநின்றவூர் நகரச் செயலாளர் ரவி, நகர மன்றத் தலைவர் உஷா ராணி ரவி, மாவட்ட அவைத் தலைவர் ராஜி, பகுதிச் செயலாளர்கள் நாராயண பிரசாத், பொன் விஜயன், யோகா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.