தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தி.க. தலைவர் கி.வீரமணி நிருபர்களிடம் கூறியதாவது: தேர்தல் ஆணையம் பாஜவின் கைகளில் உள்ளது என்பது வெளிப்படையாக தெரிகிறது. பாஜ, தேர்தல் ஆணையம், சிபிஐ, அமலாக்கத்துறை, வருமானவரித் துறை ஆகியவற்றுடன் கூட்டணி வைத்துள்ளனர். நடைபெறும் தேர்தல் 2வது சுதந்திரப் போர் ஆகும். 50 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கச்சத்தீவு விவகாரத்தை பற்றி பேசுகின்றனர்.
ஆனால் 10 ஆண்டுகளில் அதனை மீட்பதற்கு என்ன நடவடிக்கை எடுத்தோம் என்பதை குறித்து பேச மறுக்கின்றனர். தேர்தல் பத்திர ஊழல், எதிர்க்கட்சிகளை பழி வாங்குவது, வேலைவாய்ப்பு இல்லை. இவற்றையெல்லாம் மறைப்பதற்காக திசை திருப்புவதற்காக கச்சத்தீவு குறித்து பேசுகின்றனர். இலங்கைக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது மோடி கடன் கொடுத்தார். அப்போதே அவர் இதனை மீட்டிருக்கலாம். ஆனால் அதனை செய்யவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.