கிருஷ்ணகிரி கார்னேசன் திடலில்,கிருஷ்ணகிரி அதிமுக வேட்பாளர் ஜெயபிரகாஷை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: 2014ல் மத்தியில் பாஜ ஆட்சிக்கு வந்தது. ஜெயலலிதா,கச்சத்தீவை மீண்டும் இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என பிரதமரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார். இதனால் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றார். ஆனால் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை.
இப்போது மத்தியில் ஆட்சி செய்பவர்களும், தமிழகத்தில் உள்ள பாஜ., தலைவர்களும் கச்சத்தீவை பற்றி பேசுகிறார்கள். அவர்களுக்கு பேசுவதற்கு என்ன இருக்கிறது என தெரியவில்லை. 10 ஆண்டு காலமாக இதை கிடப்பில் போட்டுவிட்ட நிலையில்,இன்றைக்கு தேர்தலில் வாக்குகளை பெற வேண்டும் என்ற அடிப்படையில், அரசியல் ஆதாயம் தேடுவதற்காக கச்சத்தீவு பிரச்னையை கையில் எடுத்திருக்கிறார்கள்.
தமிழக மீனவர்களை இலங்கை அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. அப்போதெல்லாம் கவலைப்படவில்லை. இன்று மீனவர்களின் வாக்குகளை பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக அரசியல் ஆதாயம் தேடி கச்சத்தீவை பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். உண்மையிலேயே அவர்கள் மீனவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று சொன்னால், அதிமுக அரசு, வருவாய்துறை வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளது.
அதற்கு பதில் மனு போட வேண்டும். அதில், கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்ததை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று போட்டாலே,கச்சத்தீவு இந்தியாவோடு இணைக்கப்படும். இதனால் மீனவர்கள் பயன்பெறுவார்கள். தற்போது திடீரென மீனவர்கள் மீது கரிசனம் வந்து,பாஜ தலைவர்கள் பேசிக்கொண்டிருப்பது வேடிக்கையாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.