திருச்சுழி: நரிக்குடி அருகே, சுள்ளங்குடி கிராமத்தில் உள்ள பெரிய கண்மாயில் நடந்த மீன்பிடி திருவிழாவில் கெண்டை, கெளுத்தி மீன்களை கிலோ கணக்கில் அள்ளிச் சென்றனர். விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே சுள்ளங்குடி கிராமத்தில் பெரிய கண்மாய் உள்ளது. இங்கு தண்ணீர் குறைந்ததால் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக சுள்ளங்குடி, நல்லுக்குறிச்சி மற்றும் வீரஆலங்குளம் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர் நேற்று காலை கண்மாயில் குவிந்தனர்.
காலையில் ஊர் பெரியவர்கள் வெள்ளை வீசியவுடன் கண்மாயில் இறங்கிய பொதுமக்கள் கச்சா, வலை, வேட்டி, சேலை ஆகியவை மூலம் போட்டி போட்டு மீன்களை பிடித்தனர். ஒவ்வொருவரும் அதிகபட்சமாக 5 கிலோ வரை கெண்டை, கெளுத்தி, ஜிலேப்பி கெண்டை, குறவை உள்பட பல்வேறு வகையான மீன்களை பிடித்து சென்றனர். குறவை மீன்கள் அதிகளவில் சிக்கியதால் மீண்டும், மீண்டும் போட்டி போட்டுகொண்டு ஆர்வமுடன் பிடித்தனர். இதனால், அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.