Tuesday, May 21, 2024
Home » திருவண்ணாமலை கோயில் வழக்கை சிறப்பு அமர்வுக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!!

திருவண்ணாமலை கோயில் வழக்கை சிறப்பு அமர்வுக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!!

by Kalaivani Saravanan

சென்னை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலின் கிழக்கு கோபுரம் முன், வணிக வளாகம் கட்ட ஒப்புதல் வழங்கிய அரசாணைக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில் கோயில் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வுக்கு மாற்றி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலின் கிழக்கு கோபுரம் முன்பு 6 கோடி ரூபாய் செலவில் வணிக வளாகம் கட்ட அறநிலையத்துறை அனுமதி அளித்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அரசாணை பிறப்பித்திருந்தது.

இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் கோயில் வழிபாட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், ராஜ கோபுரம் முன்பு வணிக வளாகம் கட்டுவது என்பது கோயில் விழாக்களுக்கு இடையூறாக அமையும். பக்தர்கள் வந்து விழா காலங்களில் பங்கேற்பதற்கு தடையாக இருக்கும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனு தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா, நீதிபதி சந்திரசேகரன் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, அறநிலையத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, கோயில்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வில் விசாரணையில் உள்ளது. அந்த அமர்வில், எந்த கட்டுமானமும் மேற்கொள்ளப்படாது என ஏற்கனவே அறநிலையத்துறை தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஒரே விவகாரத்திற்காக எத்தனை வழக்குகள் தாக்கல் செய்தீர்கள்? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையும் கோயில் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வுக்கு மாற்றியதுடன், அந்த மனுக்களின் விசாரணையை ஜூலை 2ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டிருக்கிறார்கள்.

You may also like

Leave a Comment

19 + 6 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi