நாகர்கோவில்: நாகர்கோவில்-தடிக்காரகோணம் வழித்தடத்தில் புத்தேரி, இறச்சகுளம் நாவல்காடு, பூதப்பாண்டி, அழகிய பாண்டியபுரம், அருமநல்லூர், தடிக்கார கோணம் உள்பட பல ஊர்கள் உள்ளன. இந்த சாலையில் புத்தேரி பெரிய குளத்தில் இணையும் நாற்கர சாலையின் பணிகள் இன்றுவரை முடியவில்லை. ஆகவே அந்த வழியாக செல்லும் நூற்றுக்கணக்கான டாரஸ் லாரிகளால் மண் குவியல் காணப்படுகிறது. இதன் காரணமாக டாரஸ் லாரிகள், பேருந்துகள், கனரக வாகனங்கள் செல்லும்போது கடும் தூசி பறக்கிறது.
இதனால் அந்த வழியாகச் செல்லும் முதியோர், பெண்கள், குழந்தைகள், மாணவர்கள் என்று அனைத்து தரப்பினரும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.இதனால் ஆஸ்துமா போன்ற மூச்சு சம்பந்தமான நோய் பாதிப்பு பொதுமக்களுக்கு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விஷயத்தில் தலையிட்டு அங்கு குவிந்து கிடக்கும் மண் குவியலை அப்புறப்படுத்தி பொதுமக்களைக் காப்பாற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.