நாகர்கோவில்: சொத்தவிளை கடற்கரையில் இரவில் உலா வந்த ஜோடிகளிடம் பணம் பறிப்பதுடன், பலாத்காரம், சில்மிஷம் செய்யும் கும்பல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. குமரி மாவட்டம் சுசீந்திரம் காவல் நிலையத்துக்குட்பட்ட சொத்தவிளை, சங்கு துறை பீச் ஆகிய இரு கடற்கரை பகுதிகளும் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் இடமாக உள்ளது. இதில் சொத்தவிளை கடற்கரை பகுதியையொட்டி அதிகளவில் தனியார் ரிசார்ட்டுகளும் வந்த வண்ணம் உள்ளன. இந்த கடற்கரையையொட்டி அமைந்துள்ள தென்னந்தோப்புகள், சவுக்கு தோப்புகள் இயற்கையின் வரப்பிரசாதமாக உள்ளது.
ஆனால் இந்த தென்னந்தோப்புகளும், சவுக்கு தோப்புகளும் இளம் காதல் ஜோடிகளுக்கும், தகாத உறவில் உள்ள கள்ள ஜோடிகளுக்கும் மிகவும் வசதிகரமான இடமாக மாறி உள்ளது. காதல் என்ற போர்வையில் இந்த தோப்புகளுக்குள் நுழைந்து, தங்களது காம இச்சையை தீர்த்துக் கொள்ளும் இடமாக மாற்றி விடுகிறார்கள். இவ்வாறு வருபவர்கள் பகல் வேளைகளில் மட்டுமின்றி, இரவு நேரங்களில் வந்து செல்கிறார்கள். இரவு 10 மணிக்கு பிறகும் கூட சொத்தவிளை கடற்கரை சாலையில் கார், பைக்கை நிறுத்தி விட்டு கடற்கரை மணலில் இரவில் கைகோர்த்தபடி வாக்கிங் செல்லும் ஜோடிகள், பின்னர் தோப்புகளுக்குள் நுழைந்து விடுகிறார்கள். இவர்களை குறி வைத்தே ஒரு கும்பல் காய்களை நகர்த்தி வருகிறது.
இந்த கும்பல்கள் நள்ளிரவில் சொத்தவிளை கடற்கரை பகுதியில் பதுங்கி இருந்து, ஜோடிகள் நுழைவதை ரகசியமாக கண்காணிக்கிறார்கள். பின்னர் அவர்களை பின் தொடர்ந்து சென்று அவர்கள் உச்ச கட்ட மகிழ்ச்சியில் இருக்கும் போது செல்போனில் வீடியோ அல்லது போட்டோ எடுக்கிறார்கள். மாட்டிக் கொண்ட பதற்றத்தில் அந்த கும்பல் கேட்பதை ஜோடிகள் கொடுத்து விடுகிறார்கள். பணம், நகையை பறித்து விட்டு அடித்து விரட்டும் கும்பல், சில சமயங்களில் தனது ஆசையை அந்த இளம்பெண்ணிடம் தீர்த்துக் கொள்ளவும் செய்கிறார்கள். வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்து அனுப்புகிறார்கள். சம்பவம் வெளியே தெரிந்தால் மானம் போய் விடும் என்ற பயத்தில் பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் இதை வெளியே கூறுவதில்லை. காதல் ஜோடிகள் மட்டுமின்றி, வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து கூட அழகிகளை அழைத்து வந்த நள்ளிரவில் ஜாலியாக இருந்து விட்டு செல்பவர்களும் உண்டு. இவர்களையும் மிரட்டி பணம் பறிப்பு நடந்துள்ளது. செல்போனில் ஒரு போட்டோ அல்லது சில வினாடிகள் வீடியோ எடுத்து விட்டால் போதும், ஆயிரக்கணக்கில் பணம் கிடைத்து விடும்.
சில சமயங்களில் பணத்துடன் சேர்த்து சுகமும் கிடைக்கும் என்பதால் இதை தொடர்ந்து ஒரு கும்பல் செய்து வருகிறது. அந்த கும்பல்களை சேர்ந்தவர்களின் செய்கைகளால் பாதிக்கப்பட்டவர்கள் இதுவரை யாரும் பெரிய அளவில் காவல்துறையிடம் புகார் அளிக்க வில்லை. இதனால் இந்த விவகாரம் பற்றி தெரிந்தாலும் கூட, புகார் எதுவும் வராத நிலையில் காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ளாமல் கடந்து சென்று விடுகிறது. இந்த நிலையில் தான் கடந்த இரு நாட்களுக்கு முன் பட்டதாரி வாலிபர், தனது காதலியான மாணவி ஒருவரை இரவு 10.30க்கு சொத்தவிளை கடற்கரைக்கு அழைத்து சென்று ஜாலியாக அமர்ந்து பேசிக் கொண்டு இருக்கிறார். அந்த சமயத்தில் வந்த நாகர்கோவில் அருகே உள்ள பள்ளம் பகுதியை சேர்ந்த லியோ ராஜ் (34), சகாய சீமோலியன் (34) ஆகியோர் இந்த ஜோடிகளை முதலில் மிரட்டி கூகுள் பே மூலம் ரூ.10 ஆயிரம் பணம் பெறுகிறார்கள். பின்னர், காதலனை விரட்டி விட்டு மாணவியிம் சில்மிஷம் செய்கிறார்கள். காதலியை காப்பாற்ற ஊருக்குள் ஓடி வந்து வாலிபர்கள் சிலரை அழைத்துக் ெகாண்டு காதலன் கடற்கரைக்கு சென்றதால், மாணவியிடம் சில்மிஷம் செய்த 2 பேரும், தப்பி ஓடுகிறார்கள். பின்னர் சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு லியோ ராஜ், சகாய சீமோலியன் ஆகிய இருவரும் கைது செய்யப்படுகிறார்கள்.
இவர்கள் தற்போது நாகர்கோவில் சிறையில் உள்ளனர். முதல் முறையாக இவர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது போல் தெரிய வில்லை. இதற்கு முன்னரும் கூட இது போன்று ஜோடிகளை மிரட்டி பணம் பறித்திருக்கலாம். இளம்பெண்களை பலாத்காரம் கூட செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இவர்கள் இருவர் மட்டுமல்ல, இவர்களை போல் மேலும் பலர் இந்த நோக்கத்துடன் சுற்றி திரிகிறார்கள் . சொத்தவிளை என்பது அழகிய கடற்கரை பகுதி ஆகும். குடும்பத்துடன் வந்து செல்பவர்கள் பாதுகாப்புடன் செல்லும் வகையில் நடவடிக்கை எடுப்பதுடன், இரவு நேரங்களில் சுற்றி திரியும் ஜோடிகளை பிடித்து நடவடிக்கை எடுப்பதுடன், மிரட்டி பணம் பறிப்பு, பலாத்காரம், சில்மிஷம் செய்யும் கும்பல்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.