மும்பை: இந்தியா-ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் ஆட்டம் நேற்று மும்பையில் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸி முதலில் களமிறங்கியது. முதல் ஓவரிலேயே ரன் எடுக்காமல் ஆஸி வீராங்கனை லிட்ச்ஃபீல்ட் டக் அவுட்டானார். அடுத்து எல்லீஸ் பெர்ரியை 4 ரன்னில் வெளியேற்றினார் பூஜா. அதன் பிறகு ஆடியவர்களில் பெத் மூனி 40, தஹிலா மெக்ரத் 50, கேப்டன் அலிசா ஹீலே 38 ஆகியோர் மட்டுமே ஸ்கோர் உயர உதவினர். மற்றவர்கள் இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் பெவிலியன் திரும்பினர். அதனால் ஆஸி 77.4ஓவர்கள் விளையாடி முதல் இன்னிங்சில் 219ரன் மட்டுமே எடுத்தது.
இந்திய வீராங்கனைகள் பூஜா வஸ்ட்ரகர் 4, ஸ்நேகா ராணா 3, தீப்தி சர்மா 2 விக்கெட் எடுத்தனர். தொடர்ந்து இந்திய மகளிர் முதல் இன்னிங்சை தொடங்கினர். பொறுப்புடன் விளையாடிய தொடக்க வீராங்கனைகள் ஷபாலி வர்மா, ஸ்மிரிதி மந்தானா முதல் விக்கெட்டுக்கு 90ரன் சேர்த்தனர். ஷாபாலி 40ரன்னில் வெளியேறினார். அடுத்த சில ஓவர்களில் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அப்போது இந்திய மகளிர் ஒரு விக்கெட் மட்டும் இழந்து 19ஓவரில் 98ரன் எடுத்திருந்தனர். அதனால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 121ரன் பின்தங்கி உள்ளனர். ஜெஸ் ஒரு விக்கெட் எடுத்தார். களத்தில் உள்ள இந்திய வீராங்கனைகள் மந்தானா 43, ஸ்நேகா 4ரன்னுடன் 2வது நாளான இன்று முதல் இன்னிங்சை தொடர உள்ளனர்.