கொல்கத்தா: எனது எம்பி பதவி பறிப்புக்கு என் வெற்றிதான் சரியான பதிலடியாக இருக்கும் என்று திரிணாமுல் காங்கிரஸ் மாஜி எம்பி மஹூவா மொய்த்ரா தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹூவா மொய்த்ராவின் எம்பி பதவி பறிக்கப்பட்டது. இருப்பினும் மேற்குவங்க மாநிலம் கிருஷ்ணாநகர் மக்களவை தொகுதியில் அவர் மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில்,’ 2019 மக்களவை தேர்தலை விட இந்த முறை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்.
கடந்த ஆண்டு என்னை மக்களவையில் இருந்து வெளியேற்ற நடந்த சதிக்கு எனது வெற்றிதான் சரியான பதிலடியாக இருக்கும். நமது அரசியலமைப்பு, ஜனநாயகத்திற்கு சாவு மணி அடிக்க பாஜ அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்ட போதிலும், இந்தியா யாராலும் அழிக்க முடியாத மிகப் பெரிய நாடு. ஆனால் நமது நாட்டில் தேர்தல் ஆணையமே அதன் சுதந்திரத்தை இழந்துவிட்டது எனது போராட்டம் பாஜவுக்கு எதிரானது’ என்றார்.