பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.அருண்நேருவை ஆதரித்து மண்ணச்சநல்லூரில் நேற்று முன்தினம் இரவு நாஞ்சில் சம்பத் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: நாடு இன்றைக்கு ஒரு முட்டுச்சந்தில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டுள்ளது. ஒரு முடிவில்லாத சர்வாதிகாரம் இந்தியாவை உலுக்கி கொண்டிருக்கிறது. மனித உரிமைகளை காலில் போட்டு மிதித்து துவம்சம் செய்கிறார் மோடி. எல்.கே.அத்வானிக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பாரத ரத்னா விருதை வழங்கியபோது அத்வானி, பிரதமர் நரேந்திர மோடி அமர்ந்திருக்கிறார்கள். குடியரசுத்தலைவர் ஒரு பழங்குடி இன பெண் என்பதால் அனைத்து அதிகாரங்களும் பெற்றிருந்தும் அங்கு நிற்கிறார்.
இந்தியாவின் கோபுர பெருமை இன்று உலகெங்கும் குட்டிச்சுவராகி விட்டது. இந்தியாவின் ஜனநாயகம் மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்குகிறது. கருத்து சுதந்திரம் கல்லறைக்கு அனுப்பப்பட்டு விட்டது. இந்திய துணைக்கண்டத்தின் அரசியல் வரலாற்றில் அழுத்தமான பெரியார் கொள்கை பேசுகிற ஒரு கட்சி ஆன்மீகத்தில் அனைத்து தரப்பு மக்களையும் திருப்திபடுத்துகின்ற பணியில் இன்று இயங்குகிறது என்றால் அது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் தான். எடப்பாடி மெகா கூட்டணி வைக்க போகிறோம் என்று சொன்னார். அவர் பக்கத்தில் நிற்பதற்கு யாரும் இல்லை. பிரதமரை தனது வீட்டு வாசலில் நிற்க வைத்தவர் ஜெயலலிதா. ஆனால் இன்றைக்கு அதிமுக, பாஜவுடன் கள்ள உறவு வைத்துள்ளது. இவ்வாறு பேசினார்.