சென்னை : தமிழ்நாட்டில் வரலாறு காணாத மழை வெள்ளப் பாதிப்பு, பிரதமர் அல்லது உள்துறை அமைச்சர் நேரில் ஆய்வு செய்யக்கோரி உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு விடுதலை சிறுத்தைகள் எம்பி திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக திருமாவளவன் எழுதியுள்ள கடிதத்தில், “தமிழகத்தின் தலைநகரமான சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்கள் அண்மையில் மழை வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி ஆகிய மாவட்டங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் மழைப்பொழிவை எதிர்கொள்கின்றன.
இந்த மாவட்டங்களில் ஒரே நாளில் 60 முதல் 100 சென்டிமீட்டர் வரை மழை பெய்துள்ளது, அடுத்த 24 மணி நேரத்திற்கு தொடர்ந்து கனமழை பொழியும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது அண்மையில் சென்னையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட சிரமங்களை அதிகப்படுத்துகிறது, அவசர பேரிடர் நிவாரணம் தேவைப்படுகிறது. ஒன்றிய அரசின் உடனடித் தலையீடும் மீட்புப் பணிகளுக்காக ஆயுதப் படைகள் மற்றும் NDRF பணியாளர்களை அனுப்புவதும் உடனடி தேவையாக இருக்கிறது. மீட்புப் பணிகளுக்கு ஏதுவாக இடைக்கால நிவாரண நிதியை உடனடியாக வழங்கிட வேண்டும்.
நிலைமையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு இதை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டுமென ஒன்றிய அரசை கேட்டுக்கொள்கிறேன். மேலும், பிரதமர் அல்லது உள்துறை அமைச்சர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று சேத மதிப்பீடுகளை செய்யுமாறும் கேட்டுக்கொள்கிறேன். உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து விரிவான நிவாரண நடவடிக்கைகளை ஒருங்கிணைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் நீங்கள் உடனடியாக கவனம் செலுத்துவது மிகவும் அவசியமானது” எனக் குறிப்பிட்டுள்ளார்.