சென்னை: 13 மணி நேர சோதனைக்கு பின் அமைச்சர் பொன்முடியை விசாரணைக்கு அமலாக்கத்துறை அழைத்துச் செல்கிறது . அமைச்சர் பொன்முடி வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடஙக்ளில் காலை முதல் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஸ்ரீநகர் காலனியில் உள்ள பொன்முடி வீட்டில் இன்று காலை அமலாக்கத்துறை சோதனை நடத்த தொடங்கியது. செம்மண் குவாரி தொடர்பாக 2012ல் தொடரப்பட்ட வழக்கில் 11 ஆண்டுக்கு பிறகு இன்று சோதனை நடத்தப்பட்டது.
காலை 7 மணி முதல் 7 பேர் கொண்ட அதிகாரிகள் குழு பொன்முடி வீட்டில் சோதனை நடத்தி வந்தது. சென்னையில் சைதாப்பேட்டை, எழும்பூர், பெசன்ட் நகர் உள்பட 5 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
விழுப்புரம் சண்முகபுரத்தில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். விக்கிரவாண்டியில் அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான சூர்யா பொறியியல் கல்வி என 2 இடங்களிலும் அமைச்சரின் மகன் கவுதமசிகாமணி எம்.பி. வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்நிலையில் 13 மணி நேர சோதனைக்கு பிறகு அமைச்சர் பொன்முடியை விசாரணைக்கு அமலாக்கத்துறை அழைத்துச் சென்றது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.